வீரத்தின் முதல் வித்து வாஞ்சிநாதன்!

வரலாற்றில் ஒரு நாள்….

ஜுன் 17 என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் வாஞ்சிநாதன். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாடே அடிமையாக வாழப்பழிக்கொண்ட காலத்தில், அடிமைத்தனத்தை எதிர்த்து ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக்கொன்று புரட்சித்தீயை பற்ற வைத்த தினம் இது.

இதனாலேயே கட்டபொம்மன், வீரர் சுந்தரலிங்கம், வேலுநாச்சியார் என சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வரிசையில் நினைவுக்கூறப்படுகிறார் வாஞ்சிநாதன்.

அன்று என்ன நடந்தது?

இந்த சம்பவம் நடைபெற்றது 1911 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி அன்றைய தினம் காலை.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரையும், அவரின் காதல் மனைவி மேரியும், கொடைக்கானலுக்கு தன் பிள்ளைகளை பார்ப்பதற்காக ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். சரியாக 10.30- மணிக்கு மணியாச்சி ரயில் சந்திப்பை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தது.

வெயில் நிறைந்த, மணல் பரப்பில் மணியாச்சி ரயில்வே சந்திப்பில், கையில் துப்பாக்கியுடனும், வெறி கொண்ட சிவந்த கண்களுடனும் ஆஷ் துரையை எதிர்நோக்கி காத்திருந்தார் அந்த இளைஞர்..

ரயில் மணியாச்சி சந்திப்பை நெருங்குகிறது. அப்போது ஆஷ் துரை இருக்கும் பெட்டியில் ஏறுகிறார் அந்த இளைஞர். ஆஷை பார்த்து அந்த இளைஞனின் கண்கள் பதறவில்லை.

ஆஷ் துரைக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கண்ணிமைக்கும் நொடியில் அந்த இளைஞனின் தூப்பாக்கியில் இருக்கும் தோட்டாக்கள் ஆஷ் துரையின் இதயத்தில் பாய்கிறது. அவர்கள் பயணித்த ரயில் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. இதைத்தொடர்ந்து தனது உயிரையும் மாய்த்துகொள்கிறார் அந்த இளைஞர். அவர்தான் வாஞ்சிநாதன்..

வாஞ்சிநாதனின் வீரமிக்க வரலாறு!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில், 1886 ஆம் ஆண்டு ரகுபதி ஐயர் – ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த வாஞ்சிநாதனுக்கு, பெற்றோர் வைத்த பெயர் சங்கரன்.. ஆனால், வாஞ்சி என்றே வாஞ்சையுடன் அழைத்தனர் குடும்பத்தினர்.

செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்தில் உள்ள திருனல் மகாராஜா கல்லூரியில் இளங்கலை கல்வி பயின்றார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த மகளான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியில் சேர்ந்தார்.

அப்போது நாடு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்ட முழக்கம் உச்சத்தில் இருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரின் உரக்க பேச்சுகளால் கவரப்பட்ட வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்டத்தில் மெல்ல மெல்ல தன்னை இணைத்துக்கொண்டார்.

அப்படி தொடங்கிய போராட்ட பயணம், அரசுப் பணியில் இருந்து விலகி ஆங்கிலேயருக்கு எதிராக அணிதிரட்டும் அளவுக்கு போனது. அதற்காக, தனது நண்பர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ரகசியக் கூட்டங்களை நடத்தினார்.

அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியில் இருந்து பல்வேறு உதவிகளை பெற்றார் வாஞ்சிநாதன்.வாஞ்சிநாதன் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலம் அது. அப்போது தான் வ. வே. சு. ஐயர் , பாரதியார் போன்றோருடன் நெருக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்தே ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் வாஞ்சிநாதன்…. அந்த சம்பவம் நடைபெற்ற தினம் தான் இன்றைய சரித்திர நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here