மலாக்காவில் வெள்ளம்; 9 குழந்தைகள் உட்பட 19 பேர் வெளியேற்றம்.

மலாக்கா ,(ஜூலை 5):

மலாக்காவின் நகரத்தின் பல பகுதிகளில் இடைவிடாத மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்பது குழந்தைகள் உட்பட 19 பேர் வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை (ஜூலை 5) காலை 6 மணி முதல் பெய்த மழையைத் தொடர்ந்து வெள்ள நீர் இடுப்பளவு உயர்ந்தது. மேலும் சுங்கை புத்தாட் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பத்து பெரெண்டாம் மற்றும் செங்கின் பல சாலைகளும் நீரில் மூழ்கின.

சுங்கை புத்தாட்டைச் சேர்ந்த கிராமவாசியான முகமட் யூசோஃப் (58), கடந்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது இது இரண்டாவது முறையாகும் என்றார்.

இந்த ஆண்டின் மே மாதத்தில் முதன்முறையாக தங்கள் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது. இப்போது இது இரண்டாவது முறையாக நீரில் மூழ்கியதால் கிராமவாசிகள் பெரும் இழப்பைச் சந்தித்ததாக அவர் கூறினார்.

ஆயர் கெரோ தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் முகமட் ஹம்டான் சுடின் கூறுகையில், வீடுகளில் சிக்கியுள்ள கிராமவாசிகளை மீட்க படகுகள் பயன்படுத்தப்பட்டன என்றார்.

மாலை 6 மணியளவில் நீர் குறைந்துவிட்டபோது, வெளியேற்றப்பட்டவர்கள் திரும்ப கிராமத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here