துபாய், ஜூலை 8 :
துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குக் கப்பல் திடீரென வெடிப்புச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.
ஐக்கிய அரபு சிற்றரசின் முக்கிய நகரமான துபாயில் ஜெபர் அலி துறைமுகம் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரிய துறைமுகமான இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கப்பல் தீப்பற்றி எரிந்ததாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் தகுந்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.