எந்த பிரச்சினையும் இல்லை: ரஷ்யா
உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தயாரித்த பெகாசஸ் பயங்கரவாத எதிர்ப்பு ஸ்பைவேர் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்ற வெளிப்பாடுகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதற்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கிரெம்லின் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
பெகாசஸ் பயனர்களின் கண்காணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக புலனாய்வு அறிக்கைகள் கூறியுள்ள 45 நாடுகளின் கசிந்துள்ள சுமார் 50,000 தொலைபேசி எண்களில் ரஷ்ய நாட்டவர்களின் பெயர்கள் இதுவரை பட்டியலிடப்படவில்லை.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, இந்த பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறினார்.
இந்த வாரம் தி கார்டியன், தி வாஷிங்டன் போஸ்ட், லீ மொன்ட் மற்றும் பாரிஸை தளமாகக் கொண்ட ஃபார்பிட்டம் ஸ்டோரீஸ் ஆகியவை மெற்கொண்ட கூட்டு விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளை பெகாசஸ் (Pegasus) தயாரிப்பாளர் என்எஸ்ஓ குழுமம் மறுத்துள்ளது.
புதன்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன, கூடுதல் நடவடிக்கைகள் தேவையில்லை.” என்று கூறினார்.
“பொதுவாக, அரசாங்க தலைவர், பிரதமர், அரசாங்க நிர்வாக உறுப்பினர்கள், பிற துறைகள் ஆகியவை ஒரு சிறப்பம்சம் வாய்ந்த நம்பகமான பாதுகாக்கப்பட்ட அரசாங்க தகவல் தொடர்பு முறையைப் பயன்படுத்துகின்றன” என்று பெஸ்கோவ் கூறினார்.
இதற்கிடையில், பெகாசஸ் ஸ்பைவேரால் உளவு பார்க்கப்பட்ட முக்கிய உலகத் தலைவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெயரும் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவே மென்பொருள் மூலம் பிரதமர் மோடி உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், எதிர்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப் படுவதாக செய்திகள் வெளிவந்தன. இவர்கள் தொடர்பான ரகசியங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.