தஞ்சாவூர் உணவு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து
சென்னை;
தஞ்சையில் உள்ள, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.எப்.பி.டி.,க்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான, இந்திய உணவு பதனம் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது.இங்கு, உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம் தொடர்பான, இன்ஜினியரிங் மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த, ‘பயோ டெக்னாலஜி’ படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மத்திய உணவு பதனிடுதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்த நிறுவனத்தில், பி.டெக்., – எம்.டெக்., பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகள் முடிக்கும் மாணவர்களுக்கு, ‘கார்பரேட்’ நிறுவனங்களில், வளாக நேர்காணல் வாயிலாக வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இங்கு, ஆராய்ச்சி, கல்விப் பணிகள் மேற்கொள்வதுடன், விவசாயிகள், தொழில் முனைவோர், இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில்கள் துவங்க, பயிற்சி, ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. இந்த செயல்பாடுகளை பாராட்டி, ஐ.ஐ.எப்.பி.டி.,க்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது.