கோலாலம்பூர்: செப்டம்பர் 16 முதல் விமானம் மூலம் லங்காவி தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையினரின் அனுமதி கடிதம் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவீட்டர் தளத்தில், மற்ற மாநிலங்களிலிருந்து தரை போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே போலீஸ் கடிதம் தேவை என்று ஒரு டுவீட்டின் மூலம் தெரிவித்தார்.
“லங்காவி முன்னோடி சுற்றுலாத் திட்டமான “டிரவல் பபிள் (travel bubble)’ இன் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்காகவும், மற்றும் தரைவழியாகப் பயணம் செய்யும் போது சாலைத் தடுப்புகளில் பதன்படுத்துவதற்காகவும் போலீஸ் அனுமதிக் கடிதம் தேவை,” என்று அவர் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவின் (EMCO) கீழ் உள்ள பகுதிகளைத் தவிர நாடு முழுவதிலுமிருந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள் லங்காவிக்கு செல்ல அனுமதிப்பதாக செப்டம்பர் 9 அன்று அரசாங்கம் அறிவித்தது.
கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்ட நபர்களுக்கான சுற்றுலா குமிழி முன்னோட்ட திட்டத்தின் (pilot) முதல் இடமாக லங்காவி தீவு ரிசார்ட் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா