டெல்லியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து, ஸ்தம்பித்த போக்குவரத்து

நாடு தழுவிய அளவில், முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மத்திய பா.ஜ.க. அரசின் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லட்சக் கணக்கான விவசாயிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தன் ஓராண்டு தினத்தை ஒட்டி, இன்று, நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாடு தழுவிய போராட்டத்தால், தலைநகர் டெல்லியின் எல்லைகளில், விவசாயிகள் நடத்திய பேரணி காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பல்வேறு மாநிலங்களில், கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பஞ்சாப் – ஹரியானா மாநில எல்லையான, ஷாம்பு என்ற பகுதி முழுவதுமாக முடக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில், ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்கி வருகின்றன. அத்தியாவசியத் தேவைக்காக ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து, பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here