காபூல்: ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் மசூதியில் குண்டு வெடித்ததில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் ஷியா பிரிவு மசூதியில் நேற்று ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த எதிர்பாராத குண்டு வெடிப்பால் மசூதியில் இருந்தவர்கள் நிலை குலைந்தனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்ககள் கூறுகின்றன. இது தவிர பலர் காயம் அடைந்தனர். அவர்கல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் மசூதிக்குள் குண்டுவெடிப்பில் சிக்கிய உடல்கள் சிதறி கிடக்கும் வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரிதாபத்தை ஏற்ப்டுத்தின. இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில்,
‘ஷியா பிரிவு மக்களை குறிவைத்தே மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டனர், தலிபான் சிறப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது என்று கூறினார். குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுவரை எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் தலிபான் எதிரி அமைப்பான ஐ.எஸ் பயங்ககராவதிகள் கடந்த காலங்களில் இதுபோல் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதேபோல் இந்த தாக்குதலையும் அவர்கள்தான் நடத்தி இருக்ககூடும் என்று கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலர் மருத்துவமனைகள் முன்பு உடல்களை பெறுவதற்காக கூடி இருப்பதும், மேலும், குண்டு வெடிப்பை தவிர்ப்பதற்காக தலிபான்கள் அவர்களை அகற்றி வருவதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் சென்ற பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தை, தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
தலிபான்கள் தற்காலிக அரசை அமைத்துள்ளனர். தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு ஆப்கானில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு இதுவாகும். ஆப்கான் மண்ணில் எந்த தீய சக்திகளுக்கும் இடமிருக்காது, ஆப்கானை குண்டு வெடிப்பு தாக்குதல் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று தலிபான்கள் கூறி இருந்தனர். ஆனால் தற்போது குண்டு வெடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.