மஹாராஷ்டிர மாநிலத்தில் 6 மாதத்தில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருமணமான 18 வயதுக்கும் குறைந்த சிறுமியை, போலீசார் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பேஜோகை என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் தந்தை, தினக்கூலியாக வேலை செய்கிறார். தனது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததை அடுத்து, தனது வயது குறைந்த மகளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்த சிறுமி, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காததால், அங்கிருந்து கிளம்பி, தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அம்பேஜோகை நகர் பகுதிக்கு, வேலைத் தேடி சிறுமி வந்துள்ளார். அங்கு சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக் கூறி இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதே போல், வேலை தேடிச் சென்ற இடங்களில், ஆறு மாதங்களில், அந்தச் சிறுமியை சுமார் 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து, அம்பேஜோகை நகர காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது, போலீசார் சிறுமியை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று, மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தச் சிறுமி தற்போது 20 வார கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here