காராக் நெடுஞ்சாலையின் KM55.2 என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி, 33 லட்ச வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான கடத்தல் சிகரெட்டுகளைக் கைப்பற்றினர்.
பகாங் துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி, கடத்தல் சிகரெட்டுகள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து, புக்கிட் அமானின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் குழு ஐந்து டன் லோரியை நிறுத்தி 43 வயதான டிரைவரை அதிகாலை 4.20 மணிக்கு கைது செய்ததாகவும் கூறினார்.
சிறிது நேரத்தில் டொயோட்டா கரோலா காரை ஓட்டி வந்த ஒருவர் வந்து தன்னை லோரி டிரைவரின் நண்பர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். லோரியை சோதனை செய்ததில், டூரோ இன்டர்நேஷனல், விஸ்மிலாக் டிப்ளோமாஃப் டான் லஃப்மேன் பிரீமியம் பிளெண்ட் 22 போன்ற பிராண்டுகள் கொண்ட சிகரெட்டுகள் அடங்கிய 333 பெரிய பெட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
இரு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதோடு ஆரம்ப விசாரணையில் லோரி ஓட்டுநருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகளை கோலாலம்பூருக்கு கொண்டு செல்ல RM1,500 வழங்கப்பட்டது.
சந்தேக நபர்கள் லோரியை கோலாலம்பூருக்கு ஓட்டுவதற்கு முன்,தெரெங்கானுவில் உள்ள கெமாமனில் கடைவீதிகளின் வரிசையில் சாவியுடன் விடப்பட்ட லோரியை எடுத்து வந்ததாக கூறினர். நாங்கள் இப்போது லோரி உரிமையாளரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் இங்குள்ள பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சைஹாம் முகமது கஹரும் உடன் இருந்தார்.
மேலும் விவரித்த முகமட் யூஸ்ரி, நவம்பர் 20 முதல் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் முதல் குற்றவாளிகள் என்றும், இருவரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றும் கூறினார்.