சிரம்பான், டிசம்பர் 2 :
கடந்த மே மாதம் தனது கணவரால் தாக்கப்பட்ட போது கோமா நிலைக்குச் சென்ற பெண்னான ஜாஹிதா நோர்டின், 43, என்பவர் அறுவைச்சிகிச்சை (சிசேரியன்) மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு (நவ.30) 9 மணியளவில் ஜாஹிதாவுக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவரது தங்கையான ஃபௌசியா நோர்டின், 40, கூறினார்.
“அல்ஹம்துலில்லாஹ், அக்கா ஜாஹிதா இரவு 9 மணியளவில் அவசர அறுவை சிகிச்சை மூலம் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். நான் நாளை (நேற்று) குழந்தையைப் பார்க்கப்போகிறேன் ,” என்று அவரது முகநூல் பதிவில் கூறினார்.
மேலும் ஜாஹிதா மருத்துவமனையில் 24 மணி நேர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மே 17 அன்று, ஜோகூரில் உள்ள ஒரு அரசு ஊழியரான தனது கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால், பலத்த காயங்களுடன் சுல்தானா ஆமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இரத்தப்போக்கு காரணமாக அப்பெண்ணின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தது மற்றும் தாடை, முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் இருந்தன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ரோஸ்மைனி அப்துல் ராஃப், 38, என்பவருக்கு எதிராக ஜூன் மாதம் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில், தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவர் என்று கூறியதால், வழக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.