ஜோகூர் மாநிலம் தயாரிப்புத் துறையிலும் சேவைத்துறையிலும் இதர முக்கியத் துறைகளிலும் சிறந்த முறையில் முதலீடுகளைப் பெற்றுள்ளது என்று மாநில முதலீட்டு தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு, மனிதவள மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் இஸார் அகமட் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலகட்டத்தில் ஜோகூருக்குக் கிடைத்த மொத்த முதலீடு 6.56 பில்லியன் ரிங்கிட்டாகும். இந்த முதலீடுகள் வாயிலாக 7,860 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஜோகூர் மாநில முதலீட்டுத் திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்காக 2030ஆம் ஆண்டுக்கான ஜோகூர் மாநிலத்திற்கான பிரதான திட்டம் வரையப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
10 ஆண்டு காலத்திற்கான ஜோகூர் மாநிலத்தின் முதலீட்டுத் திட்டமாக இது அமையும். இத்திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் வரையப்படும். சட்டமன்றத்தில் ஜெமிந்தா தொகுதி ஜசெக சட்டமன்ற உறுப்பினர் டான் சென் சூன் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். நடப்பில் உள்ள முதலீடுகளை நிலைநிறுத்தவும் புதிய முதலீடுகளைக் கவரவும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக இஸார் கூறினார்.