ஒமைக்ரான் சமூக பரவலாக தொடங்கிவிட்டது… நாடாளுமன்றத்தில் அறிவித்த இங்கிலாந்து

பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இந்த எண்ணிக்கை இன்று 336 ஆக உயர்ந்தது. இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், வெளிநாடு செல்லாத பிரிட்டன் மக்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 350 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 10 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும் சஜித் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா மற்றும் போஸ்ட்வானாவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஓமைக்ரானை கவலைக்குறியதாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், அதன் பரவல் வேகமும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால், அறிகுறிகள் லேசானதாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here