பாசீர் மாஸ், டிசம்பர் 23 :
கம்போங் பெம்பானில் உள்ள ஒரு மசூதியின் உண்டியலில் இருந்து பணத்தை திருட முயன்ற மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர் நேற்று கையும் களவுமாக பிடிபட்டார்.
29 வயதான அந்த திருடன், நேற்று நண்பகல் 2.30 மணியளவில் மசூதிக்குள் அவனுக்காக காத்திருந்த பல மசூதி நிர்வாக உறுப்பினர்களால் தடுத்து வைக்கப்பட்டார்.
இது குறித்து மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முகமட் நசாருடின் முகமட் நசீர் கூறுகையில், சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டவுடன் போலீஸ் குழு மசூதிக்கு சென்றது.
மசூதியின் நிர்வாக உறுப்பினரான 57 வயதான ஒருவர், போலீசில் அறிக்கையை தாக்கல் செய்தார்.
“அறிக்கையில், தமது மசூதியின் உண்டியலில் இருந்த பணம் காணாமல் போனதாகவும், சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த பிறகு, சந்தேக நபரை தாம் அடையாளம் கண்டுகொண்டதாகவும் கூறினார்.
“எனவே நிர்வாகத்தினர் மசூதியில் காத்திருக்கத் திட்டமிட்டனர். நேற்று, சந்தேக நபர் மீண்டும் மசூதி வளாகத்திற்குள் வந்து, பூட்டப்பட்டிருந்த உண்டியலை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றார்.
இதைப் பார்த்த நிர்வாகத்தினர் உடனடியாக அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்,” என்றார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 380 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 511 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
29 வயதுடைய சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நசாருடின் மேலும் தெரிவித்தார்.