கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மகனை கார் பின்புறத்தில் பூட்டி வைத்த தாய்..!

வாஷிங்டன்,ஜனவரி 8 :

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சாரா பீம் என்ற 41 வயது ஆசிரியை, கடந்த 3 ஆம் தேதி அங்குள்ள ‘டிரைவ்-த்ரூ’ கோவிட்-19 பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார். இத்தகைய மையங்களில் வாகனங்களில் இருந்தபடியே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் சாரா பீம், கோவிட்-19 பரிசோதனை செய்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், காரின் பின்புறத்தில் இருந்து சத்தம் வருவதை கவனித்துள்ளனர். இதைப்பற்றி சாராவிடம் கேட்ட போது, காரின் பின்புறத்தில் தனது 13 வயது மகனை பூட்டி வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார ஊழியர்கள், உடனடியாக அவரது மகனை வெளியே விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு, தனது மகனுக்கு ஏற்கனவே கோவிட்-19 தொற்று உறுதியாகி உள்ளதாகவும், தனக்கு கோவிட்-19 தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவே அவனை காரின் பின்புறத்தில் வைத்து பூட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு பரிசோதனை மூலம் தனது மகனுக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது மகனை வெளியே விடாவிட்டால் பரிசோதனை செய்ய மாட்டோம் எனக் கூறிய சுகாதார ஊழியர்கள், உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பரிசோதனை மையத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை மீட்டு அவனது தாய் சாராவை கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய வழக்கில் சாரா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here