பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 12 :
2020 ஆம் ஆண்டில் தனது வீட்டில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணுக்கு எதிராக, மூத்த ஷரியா நீதிமன்ற நீதிபதி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளளார்.
அம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரூக் எஷாக் இதுபற்றிக் கூறுகையில், அந்தப் பெண் போலீசில்புகார் செய்த சில நாட்களுக்குப் பிறகு நீதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த பெண் தனக்கு எதிராக பொய்யான புகாரை அளித்ததாக நீதிபதி கூறுகிறார். இந்த விஷயம் குறித்து நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
2020 ஆகஸ்ட் மாதம், படுத்த படுக்கையாக இருக்கும் தனது கணவருடன் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு, நீதிபதி சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
57 வயதான அந்தப் பெண், நீதிபதி நள்ளிரவில் தனது வீட்டிற்குச் சென்றதாகக் கூறினார்.
அந்த பெண்ணின் படுக்கையறையை பிரார்த்தனை செய்வதற்காக நீதிபதி அனுமதி கேட்டதாகவும், அதன் பின்னர் அந்த நீதிபதி நீண்ட நேரம் படுக்கையறையில் இருந்ததால், அந்த பெண் தனது அறைக்குள் நுழைந்து சோதனை செய்தபோது, நீதிபதி தனது படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தார் என்று புகாரளித்திருந்தார்.