மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் பதின்மவயது வாலிபர் பலி!

இஸ்கந்தர் புத்திரி, ஜனவரி 19 :

இங்குள்ள ஜாலான் சுதேரா டாங்காவில் குடிபோதையில் இருந்தவர் ஓட்டியதாக நம்பப்படும் கார் மோதியதில், இளவயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இஸ்கந்தர் புத்திரி OCPD துணை ஆணையர் டிசூல்ஹைரி முக்தார் இதுபற்றிக் கூறுகையில், பாதிக்கப்பட்ட 19 வயதான உள்ளூர் ஆடவர், பெர்சியாரான் உத்தாமா டான் ஸ்ரீ யாக்கோப்பிலிருந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு, ஜாலான் சுதேரா டாங்காவில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பில் ஒரு திருப்பத்தை மேற்கொண்டபோது, இந்த விபத்து ஏற்பட்டது.

“தாமான் சுதேராவிலிருந்து பெர்லிங் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பாதிக்கப்பட்டவரை தாக்கிய பின், சாலையிலிருந்த சிவப்பு விளக்கை மோதியதாகக் கூறப்படுகிறது” என்று டிசூல்ஹைரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (ஜனவரி 19) நள்ளிரவு 12.53 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, கார் மோதியதால் பாதிக்கப்பட்டவர் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டதாகவும், அதனால் அவரது தலை, உடல் மற்றும் வலது காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவத்தின்போது, 20 வயதான கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக கார் ஓட்டுநர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

“கார் ஓட்டுநர் காயமின்றி தப்பினார், அதே நேரத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்து ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா ஆமினா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூலாயில் உள்ள தெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 44(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here