கிள்ளான் ஆற்றில் குதிக்க முயற்சித்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

கிள்ளான், பிப்ரவரி 13 :

இங்குள்ள ஜாலான் கெம் பாலத்தில், நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க உள்ளுர் (இந்திய வம்சாவழி) ஆடவர் ஒருவரின், ஆற்றில் குதிக்கும் முயற்சியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் முறியடித்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், தீயணைப்புப் படைக்கு இரவு 10.40 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், போர்ட் கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு, தகவல் கிடைத்து ஏழு நிமிடங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

“தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு, சம்பவ இடத்திற்கு வந்தபோது, சாலைத் தடுப்பில் இருந்து ஒரு நபர் ஆற்றில் குதிக்க முயற்சிப்பதைக் கண்டனர்.

“உடனே தீயணைப்பு பிரிவினர் பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர், 30 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் வெற்றிகரமாக சமாதானப்படுத்தப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மீட்கப்பட்டவர் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. தற்போது ஆற்றில் குதிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நேற்று, இங்குள்ள ஜாலான் தெங்கு கெலானாவில் உள்ள டியாவுடின் பாலத்தில் இருந்து ஒருவர் கிள்ளான் ஆற்றில் குதித்ததாக நம்பப்படுகிறது.

அத்தோடு பிப்ரவரி 8 ஆம் தேதி, அதே சம்பவம் ராஜா மூடா நாலா பாலத்திலும் நடந்தது, அங்கு ஒருவர் பாலத்தில் இருந்து குதித்ததாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here