அம்பாங், பிப்ரவரி 23 :
இங்குள்ள பண்டான் இண்டாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மதுபானம் திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவர், இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை 4.05 மணியளவில், ஒரு பெண் இரண்டு ஆண்களைத் துரத்திச் செல்லும்போது, உதவி கேட்டு அலறுவதை அருகில் இருந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் கேட்டுள்ளனர்.
அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில்,பெண்ணின் குரல் கேட்டதும், உடனே ரோந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து இரு சந்தேகநபர்களை கைது செய்தனர் என்றார்.
சோதனையின் விளைவாக, சூப்பர் மார்க்கெட்டில் இருந்து திருடப்பட்டதாகக் கருதப்படும் 78 ரிங்கிட் மதிப்புள்ள 12 மதுபானக் கேன்கள் அடங்கிய இரண்டு பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.
“லோரி டிரைவர் மற்றும் இ-ஹெய்லிங் டிரைவர்களாக பணிபுரிந்த 28 மற்றும் 34 வயதுடைய இரண்டு ஆண்கள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவர்களுக்கு முந்தய குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380 இன் படி மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இரு சந்தேகநபர்களும் இந்த சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.