யுக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை “முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்” என கூறியுள்ள யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ பொடாலியாக், “இன்று ஐரோப்பாவில் நிகழும் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்று” என தெரிவித்தார். செர்னோபிள் அணு உலையில் 1986ம் ஆண்டு நிகழ்ந்த விபத்து, மனித வரலாற்றில் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான அணு விபத்தாகும்.
செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தால், அத்தகைய பேரழிவு மீண்டும் நடக்கும் என, யுக்ரேன் அதிபர் எச்சரித்துள்ளார். செர்னோபிள் அணு விபத்துத் தளத்தில், “மற்றுமொரு சூழலியல் பேரழிவு” நிகழ்வதன் சாத்தியம் குறித்து, யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.