கோல திரெங்கானு, பிப்ரவரி 26 :
திரெங்கானுவின் பெசூட் மற்றும் டுங்கூன் உட்பட ஐந்து மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 772 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,563 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தஞ்சமடைந்துள்ளனர்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், கெமாமன், உலு தெரெங்கானு மற்றும் செட்டியுவிலும் மொத்தம் 51 தற்காலிக வெளியேற்ற மையங்கள் (PPS) திறக்கப்பட்டுள்ளன.
“உலு திரெங்கானுவில், நேற்று மாலை 5 மணியளவில் பதிவு செய்யப்பட்ட 334 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 652 பேராக இரட்டிப்பாகியுள்ளது.
“பெசூட்டைப் பொறுத்தவரை, 11 வெள்ள நிவாரண மையங்களில் 414 பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அதே நேரத்தில் செத்தியுவில் 234 பாதிக்கப்பட்டவர்களும் டுங்கூனில் 69 பாதிக்கப்பட்டவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி எட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என மலேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தொடங்கி திரெங்கானுவின் பல பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 2 முதல் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளத்தை விட இம்முறை வெள்ளப்பாதிப்பு மிக மோசமானதாக கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை இன்று பிற்பகல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை காலை கரையோரப் பிரதேசத்தில் சிறிய மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் இரவு வரை வானிலை சீரடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Public Infobanjir இணையதளத்தில் 9 ஆறுகள் அபாய அளவைத் தாண்டியதாகக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.