லிம்பாங், பிப்ரவரி 26 :
இங்கு லாவாஸில் உள்ள கம்போங் செபெராங் கெடாயில், நேற்றிரவு 9 குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்த வீடு தீப்பிடித்ததில், மூன்று சகோதரர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பலியானவர்கள் 4 வயது முகமட் ஹெஸ்டி ஹுசைடி அஸ்ரி மற்றும் அவரது இரண்டு மூத்த சகோதரர்கள், முறையே 7 மற்றும் 8 வயதுடைய முகமட் ஹெஸ்மி ஹுசைலி அஸ்ரி மற்றும் முகமட் ஹெஸ்ரி ஹுஸைமி அஸ்ரி என அடையாளம் காணப்பட்டனர்.
மற்றைய 6 குடும்ப உறுப்பினர்களும் தீப்பிடித்த வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், லாவாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு இரவு 11 மணியளவில் பேரிடர் அழைப்பைப் பெற்ற பின்னர், சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவித்தார்.
” தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு மாடிகள் கொண்ட அரை நிரந்தர குடியிருப்பு வீடு தீ விபத்துக்குள்ளாகி, 100 விழுக்காடு எரிந்து நாசமானது,” என்று கூறினார்.
செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, தீயில் தப்பிய 6 பேர் பலியானவர்களின் பெற்றோர்களான அஸ்ரி லத்திப், 45, மற்றும்தாய் ஹதியனாவதி, 38, அவர்களின் மூத்த சகோதரர்கள், சகோதரி ஆரியனா அஸ்ரி, 14, மற்றும் சகோதரர் முஹத் ஹெஸ்ரி அஸ்ரி, 12, மற்றும் அவர்களது தாத்தா பாட்டிகளான அவங்கு ஜெமன் பெங்கிரன் அப்துல் ஹமீத், 72, மற்றும் அமினா மாடுசோப், 73 ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர்.
நள்ளிரவு 12.45 மணியளவில் தீயை அணைக்கும் பணி முடிவடைந்து, சடலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.