இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு 6 வயது சிறுவன் மரணம்

மிரி, மார்ச் 12 :

இன்று காலை 8 மணியளவில், ஜாலான் பெசிசீர் பந்தாய் பாக்கத்தில் நான்கு குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற தோயோத்தா ஹிலக்ஸ் வாகனம், எதிர் திசையில் இருந்து வந்த வாகனம் மீது மோதியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்தான்.

சரவாக் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைமை கண்காணிப்பாளர் அலெக்சன் நாகா சாபு இதுபற்றிக் கூறுகையில், இந்தச்சம்பவத்தில் பலியானவர் ஐடன் சியாங் யோங் ஜுன் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார்.

அவரது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்ததாக, பரிசோதனையை மேற்கொண்ட மீரி வைத்தியசாலை வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த தோயோத்தா ஹிலக்ஸ் வாகனத்தின் ஓட்டுநராக இருந்த பாதிக்கப்பட்டவரின் தந்தை, தாய் மற்றும் 3 வயது சகோதரி ஆகியோருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக அவர் கூறினார்.

“மேலும் இன்னுமொரு அடையாளம் தெரியாத ஆண் பயணி பலத்த காயம் அடைந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பெரோடுவா அல்சாவின் ஓட்டுநரான 63 வயதுடைய நபரது கால் உடைந்ததாகவும், மேலும் இரண்டு பயணிகள் காயமடைந்ததாகவும் அலெக்ஸன் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில் தோயோத்தா ஹிலக்ஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் நுழைந்து பெரோடுவா அல்சாவுடன் மோதியது.

“வலுவான மோதல் காரணமாக தோயோத்தா ஹிலக்ஸ் கவிழ்ந்ததில், பலியானவர் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மிரி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இந்த வழக்கு 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here