ஆஸ்கர் விருது மேடையில் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் தாக்கியது பரபரப்பான பேசுபொருளானது. கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மருத்துவக் குறைபாட்டை வைத்து ஜோக் அடித்ததால் ஸ்மித் தாக்கியதற்கு ஆதரவாகவும், என்ன இருந்தாலும் வன்முறை தவறானது என அவரது செயலை எதிர்த்தும் இருவிதமான கமென்டுகள் உலகெங்கிருந்தும் வர, ஆஸ்கர் அமைப்பு அவரது செய்கையைத் தவறென கூறி அதன் மீதான விசாரணை நடத்த இருக்கும் முடிவை அறிவித்திருந்தார்கள். கிறிஸ் ராக் இது குறித்து காவல்துறையிடம் எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், வில் ஸ்மித் “பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருக்கும் இந்தக் கடிதத்தில் அவரது செயல்களுக்கு வருந்துவதாகவும் தன்னை மாற்றிக் கொள்ளும் பணியில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் வில் ஸ்மித்.
அதன் தமிழாக்கம் இதோ,
எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான். ஆனால் ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்னை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன்.
பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.”