கோத்தா பாரு, மே 10 :
கோத்தா பாரு வாசிகளினால் இந்த இரண்டு வார காலத்தில் மட்டும், நாள் ஒன்றிற்கு சராசரியாக 300 முதல் 350 டன் வீட்டுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர் டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வந்ததால், அய்டில்ஃபிட்ரிக்கு முன்னும் பின்னும் குப்பை அகற்றுவதில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன், குடியிருப்புவாசிகளால் ஒரு நாளைக்கு 250 முதல் 300 டன் வரை குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
“கோத்தா பாரு மாவட்டத்தில் வசிப்பவர்களால் அகற்றப்படும் குப்பைகளின் அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக, ஹரி ராயாவிற்கான தயாரிப்புகள், அதாவது மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது மற்றும் கொண்டாட்டங்களுமாகும் என்று அவர் கூறினார்.
துப்புரவு பணியாளர்கள் அர்ப்பணிப்புடனும், கடமையுடனும் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்த ஆண்டு தூய்மை தொடர்பான எந்த பிரச்னையும் ஏற்படவில்லை,” என்றார்.
இன்று கோத்தா தாருல்னைமில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற அய்டில்ஃபிட்ரி நட்புறவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் இசானி, குப்பை சேகரிக்கும் இயந்திரங்கள் போதுமானதாக இல்லை என்றால், தனியார் இயந்திரங்களின் உதவியை கிளாந்தான் அரசு கேட்கும்.
“மாநிலத்தை தூய்மையாக மாற்ற, தூய்மையை மேம்படுத்த பட்ஜெட்டை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை மாநில அரசு பரிசீலிக்கும் என்றார்.
மேலும், கிளாந்தானில் தூய்மையைப் பராமரிக்க மாநில அரசும் மக்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறினார்.