கோலாலம்பூர், மே 17 :
இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்னோ சுப்ரீம் ஒர்க்கிங் கவுன்சிலின் (MKT) உறுப்பினராகவும் உள்ள அவரது இந்த நியமனம் உறுதிசெய்யப்பட்டதாக இன்று ஒரு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தாஜூடின் சந்தித்துப் பேசியதை பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
“ஆமாம்..இருக்கிறது” என்று சுருக்கமாக இரு தலைவர்களின் சந்திப்பை பற்றி விவரிக்காமல் கூறினார்.
இந்த மாத இறுதியில் இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதராக தாஜூடின் அறிக்கையிட உள்ளதாக இன்று அந்த உள்ளூர் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
74 வயதான தாஜூடின், கடந்த நவம்பரில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்திப்பதற்காக, மலேசிய பிரதமர் மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அந்த தூதுக்குழுவில் இணைந்திருந்தார்.
இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் பதவி தற்போது காலியாக உள்ளதுடன், கடைசியாக டத்தோ ஜைனால் அபிதீன் பாக்கார் பதவி வகித்து வந்தார்.
தற்போது, இந்தோனேசியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் தற்காலிகப் பொறுப்பாளர் அட்லான் முகமட் ஷபீக், அங்குள்ள தேசிய தூதரக உறுப்பினர்களை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.









