மலாக்கா, மே 28 :
மலாக்காவின் பத்து பேரெண்டமிலுள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையம் (LTAM) Batik Air என அழைக்கப்படும் மலிண்டோ ஏர் வழியாக மலாக்கா -பினாங் -மலாக்கா வழிதடத்தை இந்த ஜூன் மாதத்திற்குள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைவர் டத்தோ முஹமட் ஜெய்லானி காமிஸ் கூறுகையில், ஆரம்பத்தில் இருவழி விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை என்ற இலக்கில் செயல்படும் என்றும், பின்னர் தேவைக்கேற்ப விமானங்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
“LTAM மூலம் விமானப் பாதைகளைத் திறப்பது மாநிலத்தில் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சியில் மிகவும் முக்கியமானது, இதனால் இந்த ஆண்டு மலாக்காவிற்கு 5.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை பதிவு செய்து, நமது இலக்கை அடைய முடியும்” என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற மாநில சுற்றுலாத் துறை நிறுவனங்களுடனான ‘புத்துயிர் மற்றும் புத்துணர்ச்சி மலாக்கா’ நிகழ்வின் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.








