கோலாலம்பூர், ஜூன் 5 :
‘சூப்பர்மேன்’ மற்றும் ஜிக்-ஜாக் ஸ்டண்ட் உள்ளிட்ட ஆபத்தான செயல்களை செய்த மற்றும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஒட்டிய ஒன்பது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இன்று அதிகாலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) உறுப்பினர்களால் Integrated Op, Street Gangster Op, Speed Limit Op, Motorcycle Op போன்ற குறியீட்டு பெயர்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்பட்ட நடவடிக்கை மூலம், பல்வேறு குற்றங்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஒட்டிய பலர் கைது செய்யப்பட்டனர்.
அதே நடவடிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 12 ஓட்டுநர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கோலாலம்பூர் JSPT துணைத் தலைவர், கண்காணிப்பாளர் சுல்கப்பிலி செக் லா கூறுகையில், கோலாலம்பூர் நகர மையம், ஜாலான் ராஜா லாவூட், ஜாலான் துன் ரசாக், ஜாலான் கூச்சிங் மற்றும் துடா-உலு கிள்ளான் நெடுஞ்சாலை (DUKE) ஆகியவற்றைச் சுற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
“ஆபத்தான செயல்களைச் செய்த 14 முதல் 21 வயதுடைய ஒன்பது ரைடர்கள் கோலாலம்பூர் போக்குவரத்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் (APJ) 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் மற்ற சாலை பயனர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.
மேலும் 23 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டிய 12 வாகன ஓட்டுநர்கள் பிரிவு 45 (A) APJ 1987 இன் கீழ் கைது செய்யப்பட்டு, கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதே பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டனர்,” என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
“கோலாலம்பூர் தெருக் கும்பல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் முற்றிலும் ஒழிப்பதற்கும், சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை தமது துறை தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.