கோலாலம்பூர், ஜூன் 7 :
நேற்று இங்குள்ள ஆலாம் மேகா LRT நிலையத்தின் தண்டவாளத்தில், அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர் ஒருவரின் செயலால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அத்தோடு பொது போக்குவரத்து அமைப்பு சிறுது நேரம் ஸ்தம்பித்தது.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அப்துல் காலிட் ஓத்மான் கூறுகையில், இந்த சம்பவத்தை நண்பகல் 2 மணியளவில் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு துணை போலீஸ்காரர் கவனித்தார்.
“அதனைத்தொடர்ந்து, 24 வயதான வங்காளதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்தார் என்றும் சந்தேகநபர் ரயில் தண்டவாளத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டார் என்றும் ” கூறினார்.
“சந்தேக நபர் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 447 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) இன் படி மேலதிக விசாரணைக்காக போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக விசாரணைக்காக மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.