சுங்கை பட்டாணி, ஜூன் 21 :
கடந்த சனிக்கிழமை, இங்குள்ள பெடோங், தாமான் செமாலிங் மாஜூவில் உள்ள கட்டடத்தின் நடைபாதையில் இருந்த இரண்டு பூனைகள் மீது கற்கள் என நம்பப்படும் பொருட்களை எறிந்த மற்றும் உதைந்த குற்றச்சாட்டின் பேரில், ஒரு நபர் இன்று முதல் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இன்று காலை சுங்கை பட்டாணி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நூர் ஃபஸ்லினா மூசாவினால், குற்றவியல் சட்டத்தின் 428வது பிரிவின் கீழ் விசாரணை நடத்த காவல்துறைக்கு உதவும் வகையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, சந்தேக நபர் தெருவிலிருந்த இரு பூனைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதைக் காட்டும் மூன்று நிமிடங்கள் கொண்ட கண்காணிப்பு கேமரா காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில கால்நடை சேவைத் துறை அந்தப் பூனைகளைக் காப்பாற்றி சிகிச்சையளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தவிர, கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் கூறுகையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.09 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களுடனான விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் முன்பு ஒரு பூனைப் பிரியர் என்றும், பல விலங்குகளை அவரது வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார்கள் ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.