கோம்பாக், ஜூன் 22 :
ரவாங் அருகே, வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 445.8 ஆவது கிலோமீட்டரில், அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அவசரப்பாதையில் நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த லோரியின் பின்புறத்தில் மோதியதில், ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவில் பணியில் இருந்த சார்ஜென்ட் டினோ சுபோனோ, 46, என்பவரே தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமட் கூறுகையில், செராஸில் இருந்து ரவாங் நோக்கி செல்லும் வழியில் 37 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற லோரி பழுதடைந்ததைத் தொடர்ந்து, அந்த லோரி அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.
இந்த மோதலின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதால் உயிரிழந்ததாகவும், லோரி ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று வைத்திய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு (HSB) அனுப்பப்பட்டது, அத்தோடு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.