தாப்பா, ஜூன் 25 :
தாப்பாவின் 12 ஆவது மைல், ஜாலான் தாப்பா-கேமரன் ஹைலேண்ட்ஸ் அருகே, கடந்த வியாழன் அன்று அவர்கள் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்ததில், மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர், வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் இருந்து இரவு 11.59 மணிக்கு தமது துறைக்கு தகவல் கிடைத்தது என்றார்.
இந்த சம்பவத்தில் 51 வயதான இராணுவ ஓய்வு பெற்ற காரின் ஓட்டுநர் மற்றும் 37 வயதுடைய பெண் பயணியும் காயமடையவில்லை எனவும், மற்றொரு பயணியான 45 வயதுடைய பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட மூவரும் சிலாங்கூரில் இருந்து கோலக்கிராய், கிளாந்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று வான் அசாருதீன் கூறினார்.
“போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் சாலையின் ஒரு வளைவுக்குள் நுழையும்போது, அவர் பாதையின் திசையில் குழப்பமடைந்ததாக நம்பப்படுகிறது.
“அச்சமயத்தில் சாலை இருட்டாக இருந்ததால், ஆற்றினை பாலம் என்று எண்ணிய ஓட்டுநர், தொடர்ந்து காரை ஆற்றுக்குள் செலுத்தினார்,” என்று கூறினார்.
காரில் பயணித்த மற்ற இருவர் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் தானே சொந்தமாக காரிலிருந்து இறங்கி, நீந்திக் கரையேறினார்.
பாதிக்கப்பட்டவரின் வாகனம் நேற்று காலை சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.