ஜோகூர் பாரு, ஜூன் 29 :
கடந்த ஜூன் 21 முதல் 23 வரை ‘Op Tapis Khas’ என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட சோதனைகளில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 318 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜாமான் மாமட் கூறுகையில், ஃபெல்டா மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இதில் 18 முதல் 70 வயதுக்குட்பட்ட 299 ஆண்களும் 19 பெண்களும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சந்தேக நபர்களுக்கு எதிராக ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39C மற்றும் அதே சட்டம் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 இன் பிரிவு 3(1) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் 52 தேடப்படும் நபர்களையும், 28 போதைப்பொருள் வியாபாரிகளையும் போலீசார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அத்தோடு அவர்களிடமிருந்து ஹெரோயின் 567.50 கிராம், சியாபு (89.22 கிராம்), கஞ்சா (11.61 கிராம்), எரிமின் 5 மாத்திரை ஒன்று, யாபா மாத்திரைகள் (இரண்டு) கெத்தும் நீர் (226 லிட்டர்) மற்றும் கெத்தும் இலைகள் (18.14 கிலோகிராம்) எனப் பல்வேறு வகையான போதைப்பொருள்களையும் போலீசார் கைப்பற்றினர்.
“அனைத்து போதை மருந்துகளும் RM13,529.75 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த மருந்துகளின் அளவு தொடர்ந்து சந்தையில் இருந்தால், 3,814 போதைப்பித்தர்களால் பயன்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 1 முதல் நேற்று வரை, பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 6,948 பேரை ஜோகூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தடுத்து வைத்துள்ளதுடன், மொத்தம் 2.16 டன் போதைப்பொருள் ரிங்கிட் 9.69 மில்லியன் பெறுமதியானவை என அவர் மேலும் தெரிவித்தார்.