அலோர் ஸ்டார், ஜூலை 8 :
இங்குள்ள கெப்பாலா பத்தாஸ் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பை ஒரு பந்தய சுற்றுவட்டமாக மாற்றிய மோட்டார் சைக்கிள் குழுக்களுக்கு எதிராக இன்று அதிகாலை போலீசாரார் மேற்கொண்ட சோதனையில் 295 சம்மன்கள் விதிக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இகுழுவின் செயல்களை கண்டறிந்த போலீசார், அதிகாலை 3 மணியளவில் 203 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர்.
எனினும் அவர்களில் சிலர் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச் சென்றனர்.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அகமட் சுக்ரி மாட் அகிர் கூறுகையில், கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) இன்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை அப்பகுதியைச் சுற்றி தெரு கும்பளுக்கு எதிரான நடவடிக்கையை நடத்தியது.
இந்த நடவடிக்கையில், மொத்தம் 143 மோட்டார் சைக்கிள்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் பின்னிருக்கை பயனர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 203 பேரை ஆய்வு செய்ததாகவும் அவர் கூறினார்.
“அந்த எண்ணிக்கையில், அவர்களில் 8 பேர் பதின்ம வயது பெண்கள், மீதமுள்ளவர்கள் 15 முதல் 30 வயதுடையர்கள் என்றார்.
“மோட்டார் சைக்கிளை மாற்றியமைத்தல், வயது குறைந்தவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் உரிமம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 295 சம்மன்கள் வழங்கப்பட்டன.
சோதனையின் போது விட்டுச் சென்ற 22 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளோம், அதன் உரிமையாளர்களை இனம் அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரை அழைத்து, மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்புவோம்,” என, நடவடிக்கை முடிந்ததும், அவர் கூறினார்.
மேலும் கைது செய்யப்பட்ட 30 பேரும் மோட்டார் சைக்கிள் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் என்று அகமட் ஷுக்ரி கூறினார்.
அவர்களில் பெரும்பாலோர் இந்த மாவட்டத்தைச் சுற்றி வாழ்கிறார்கள், சிலர் போக்கோக் சேனாவிலிருந்தும், கங்கார், பெர்லிஸிலிருந்தும் வருகிறார்கள் என்றார்.
மேலும் இங்குள்ள கெப்பாலா பத்தாஸ் காவல் நிலையத்தில் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோர் வந்த பின்னரே, தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்