வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, இதுவரை 121 தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது- பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தகவல்

பாலிங், ஜூலை 10 :

இதுவரை இங்குள்ள பல பகுதிகள் மற்றும் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து 121 விண்ணப்பங்களை பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (PKOB) பெற்றுள்ளது.

ஜூலை 4 ஆம் தேதி இந்த மையம் திறக்கப்பட்டதில் இருந்து பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் தனிநபர்களிடமிருந்து பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டதாக பாலிங் போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் ஷம்சுதீன் மாமட் தெரிவித்தார்.

“அவர்கள் அனைவரும் மனிதாபிமான உதவி மற்றும் இடங்களை தூய்மைப்படுத்தும் வகையில் பல உதவிகளை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைத் தணிக்க உதவும் நன்கொடைகளை பொதுமக்களிடமிருந்து நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம். உதவி மற்றும் நன்கொடைகளை வழங்க விரும்பும் எந்தவொரு தரப்பினரும் பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தில் பதிவு செய்ய வேண்டும், இதனால் அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு அனுப்பப்படும்,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்ட காணொளி தொடர்பில், அதாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பல வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படும் வீடியோ தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதை காவல்துறை ஒருபோதும் தடுக்கவில்லை என்று ஷம்சுதீன் கூறினார், ஆனால் அது நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி செய்யப்பட வேண்டும், அதாவது முதலில்பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் அனைவரும் கைவிடப்படாமல் உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து உதவிகளையும் பங்களிப்புகளையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டதே இந்த ஒழுங்குமுறை என்று அவர் மேலும் விளக்கினார்.

“லதா செலாக் முதல் குபாங் வரையிலான இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 38 கிராமங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் எங்களிடம் உள்ளன. இந்த உதவி ஒரே இடத்தில் குவிவதை நாங்கள் விரும்பவில்லை, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

“எனவே பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தில் உதவி வழங்குநர் விண்ணப்பித்ததும், அது ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒரு கடிதத்தை கொடுக்கும் மற்றும் உதவி எங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும், மேலும் அந்த பகுதியில் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களின் தொலைபேசி எண்கள் அவர்களுக்கு வழங்கப்படும், இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து இதுவரை வீடுகள் சேதம், சொத்து இழப்பு மற்றும் சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போதல் தொடர்பான 1,000 -க்கும் மேற்பட்ட போலீஸ் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன என்று ஷம்சுதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here