வாஷிங்டன்,ஜூலை 14:
பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் இருப்பதால் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை குறைத்து வருகின்றன.
நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் சமீபத்தில் முடிவு செய்தது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் திடீரென 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மறுசீரமைப்பு நடவடிக்கையாக 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடரும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் குறித்த முன்னணி நிறுவனங்களின் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.