ஜோகூர் பாரு, ஜூலை 15 :
இன்று இங்குள்ள தாமான் டாயா என்ற இடத்தில் உள்ள நிபா அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆண் ஒருவர் தனது சொந்த மனைவியால் அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தை உறுதி செய்த ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறுகையில், கொலைசெய்யப்பட்ட லீ மிங் ஹவ் (44) என்பவரின் உடல் அவரது வீட்டில் கிடந்ததாகக் கூறினார்.
“காலை 7.50 மணிக்கு சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது, இச் சம்பவம் தொடர்பில் 35 வயதான கொலை செய்யப்பட்டவரின் மனைவியை போலீசார் கைது செய்தனர் என்றும் ”இந்தத் தம்பதியின் மூத்த மகன்,11 சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக இருக்கிறான்,” என்று அவர் மேலும் கூறினார்.
கொலைக்கான நோக்கம் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பில் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் ரவூப் கூறினார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதற்கிடையில், ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்டவரின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார் மற்றும் அவரது முகத்தின் வலது பக்கத்தில் காயங்கள் இருந்தன.
அதன் பிரகாரம், இன்று காலை 9.40 மணியளவில் குறித்த குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் வைத்து சந்தேகநபர் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக நம்பப்படும் போது, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர்களின் கருத்துப்படி, இந்த தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்பவர்கள் என்றும், மேலும் சந்தேக நபரான பலியானவரின் மனைவி இதற்கு முன்பு காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்தப்பெண் பொதுவாக நல்லவர் என்றும் , அவருக்கு மனநலப் பிரச்சனை இருப்பதாகவும் தெரிகிறது. அதனால், சில சமயங்களில் அவர் கடுமையாக நடந்து கொள்வார், அடிக்கடி கோபப்படுவார்.
“ஆனால் அந்த பெண் மாண்டரின் மொழியில் தனியாக பேசுவதால் என்ன சொல்கிறாள் என்று எனக்கு புரியவில்லை,” என்றும் அந்த பகுதியிலுள்ள சிலர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் காலை 11 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.