சிந்த், ஜூலை 16 :
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், காவலாளியாக ஆஷிக் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி நர்கீஸ்.
இந்நிலையில், ஆஷிக் அவரது மனைவியை தனது 6 குழந்தைகளின் முன் கொன்று, உலோக பானை ஒன்றில் போட்டு கொதிக்க வைத்து விட்டு தப்பியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் சாட்சியாக உள்ளவர்களில் ஒருவரான, அவரது 15 வயது மகள் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். போலீசிடம் ஆஷிக்கின் மகள் கூறும்போது, அவரது தந்தை 3 குழந்தைகளை உடன் அழைத்து கொண்டு தப்பியோடி விட்டார் என கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, பள்ளியில் இருந்த பணியாளர்கள் குடியிருப்பிலேயே ஆஷிக் வசித்து வந்துள்ளார். கடந்த 8 முதல் 9 மாதங்களாக பள்ளி செயல்படாமல் மூடப்பட்டு இருந்துள்ளது என கூறினர்.
மேலும், ஆஷிக்கின் மகள் போலீசாரிடம் தெரிவித்த தகவலில், நர்கீசை அவரது கணவர் ஆஷிக் முதலில், தலையணை ஒன்றை வைத்து மூச்சு திணற செய்து உயிரிழக்க செய்துள்ளார். இதன்பின்னர், பள்ளி கூடத்தில் இருந்த உலோக பானை ஒன்றில் உடலை போட்டு கொதிக்க வைத்துள்ளார். இவை அனைத்தும் அவர்களின் குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில், பெண்ணின் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்கீசை சட்டவிரோத உறவில் ஈடுபட ஆஷிக் வலியுறுத்தி உள்ளார். அதற்கு நர்சீஸ் மறுத்த நிலையில், அவரை ஆஷிக் கொலை செய்துள்ளார் என போலீசார் தரப்பில் ஊகிக்கப்படுகிறது.
மீதமுள்ள 3 குழந்தைகளையும் போலீசார் மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி கிழக்கு மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரெண்ட் அப்தூர் ரகீம் கூறும்போது, ஆஷிக்கின் குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நர்கீசின் உடல் மீட்கப்பட்டு ஜின்னா முதுநிலை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர் என கூறியுள்ளார்.








