கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் 8 :
நேற்று நண்பகல் ரானாவ், குண்டசாங்கில் கினாபாலு மலையில் ஏறும் போது 51 வயது உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மலைப்பாதையின் KM 3.2 இல் பாதிக்கப்பட்டவரை மலை ஏறும் வழிகாட்டி ஒருவர் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
சம்பவம் தொடர்பில், “மவுண்ட் கினாபாலு தேடல் மற்றும் மீட்புக் குழுவிற்கு நேற்று பிற்பகல் 1.23 மணியளவில் அவசர அழைப்பு வந்தது, உடனே இரண்டு அதிகாரிகள் உட்பட 12 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு இருதய நுரையீரல் புத்துயிர் (CPR) சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டு சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று மாலை 4.30 மணிக்கு மீட்பு நடவடிக்கை நிறைவுபெற்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.