கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் 8 :
இங்குள்ள ஜாலான் புக்கிட் நெனாஸ் என்ற இடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட நோரெய்ன் ஜாசிஸ், 11, மற்றும் இசா சப்ரி, 2, ஆகியோர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் (HQE) இறந்தது உறுதிசெய்யப்பட்டது, அதே நேரத்தில் இறந்தவர்களின் பெற்றோர்களான சித்தி நூர், 28, என்பவருக்கு கை முறிவு மற்றும் அவரது கணவர் சப்ரி போடோங், 28, காலில் சிறிய காயங்கள் ஏற்பட்டது. அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு 8.26 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக, சபா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து லிந்தாஸ் மற்றும் கோத்தா கினாபாலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 24 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இயந்திரங்கள் மற்றும் அவசரகால சேவைகள் ஆதரவு பிரிவு ஆகியன சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஒன்பது பேர் கொண்ட குடும்பம் வசிக்கும் வீட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“இந்த சம்பவத்தில் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் மூன்று பேர் தரையில் மற்றும் மரங்களுக்கடியில் புதைக்கப்பட்டனர், மற்றொருவர் காலில் காயமடைந்தார்,” என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு EMRS குழுவால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் EMRS மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
“இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது, மற்ற இரண்டு காயமடைந்தவர்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, நேற்று இரவு 10 மணியளவில் மீட்பு நடவடிக்கை முடிந்தது.