கோத்தா பெலூட், ஆகஸ்ட் 8 :
கம்போங் கெபாயுவில், நேற்று முதல் காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த மூன்று ஊனமுற்ற (OKU) சிறுவர்கள் உட்பட 7 பிள்ளைகள் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
3 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் கிராமப் பகுதியில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரப்பர் மரம் மற்றும் பழத்தோட்டப் பகுதியில் உள்ள குடிசையில், காலை 7.40 மணியளவில் கிராம மக்களான, ராபர்ட் சாண்டிம், 50, அவரது இரண்டு நண்பர்களான ஜோலியஸ் சும்பிங், 41 மற்றும் வின்சென்ட் சிகின், 36, ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
“அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக காணப்பட்டனர், இருப்பினும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர்கள் கூறினர்.
மேலும் அவர்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்துள்ள சிற்றோடையில் ஆமைகளைத் தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் “ரொட்டி மற்றும் தண்ணீர் இருந்ததாகவும் இருட்டாகியதை தாம் கவனிக்கவில்லை என்றும், அதனால் இரவு அருகிலுள்ள குடிசையில் தங்க வேண்டியிருந்தது,” என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், கோத்தா பெலூட் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முஹமட் சியாஸ்வான் லதுன் கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைவரையும் துணை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்.
“பாதிக்கப்பட்ட ஏழு பேரில் இருவர் சிறிய காயங்கள் காரணமாக கோத்தா பெலூட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் மற்றும் அவர்கள் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றார்.”
“இன்று காலை 9.30 மணியளவில் மீட்பு நடவடிக்கை முடிவடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மற்றயவர்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
நேற்று மாலை சுமார் 3 மணியளவில், பாதிக்கப்பட்ட ஃப்ரெடி கெரின்சுக் (OKU), 15; ஆர்னி கெரின்சுக் (OKU), 13; அலிஸ்டார் கெரின்சுக் (OKU), 9; ராய்ஸ் கெரின்சுக், 3; மெக்லோன் டேடின், 12; எல்சன் இவான் லீ வில்லி, 11 மற்றும் எல்சி ஜாக்டர், 5, ஆகியோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர்.
தேடல் நடவடிக்கை 30 க்கும் மேற்பட்ட கிராமவாசிகளின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவும் அதனுடன் ஒரு கண்காணிப்பு நாய் பிரிவு (K9) ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.