கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 :
டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான ஆவணங்கள் கசிந்தது குறித்து, கூட்டரசு நீதிமன்றம் காவல்துறையில் புகாரளித்துள்ளது.
கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த தீர்ப்பு கசிவானது நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் நீதி நிர்வாகத்தின் நேர்மையை பரிசோதிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்று கூறியது.
நாட்டின் நீதித்துறை அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் வகையிலும் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் பேர்கொள்ளப்படும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் பொறுப்பற்ற செயல்களால் நீதித்துறை ஒருபோதும் தடுமாறது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இந்தச் செயல், நீதிமன்றத்தின் செயல்பாடு மற்றும் நீதி நிர்வாகத்தின் நேர்மையை பாதிக்கும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல். இதனால், குறித்த இணையதளத்தில் வெளியான செய்திகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“செப்டம்பர் 1, 2022 அன்று ரோஸ்மா மன்சோர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட ஆவணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
RM1.25 பில் சரவாக் கிராமப்புற பள்ளிகளின் சூரிய சக்தி (சோலார்) திட்டத்துடன் தொடர்புடைய மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் ரோஸ்மா மீது சுமத்தப்பட்டன.
உயர் நீதிமன்ற நீதிபதி ஜைனி மஸ்லான் செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு ரோஸ்மாவின் ஊழல் வழக்கு தொடர்பான தனது தீர்ப்பை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









