கூலாய், ஆகஸ்ட் 29 :
மாவட்ட அளவிலான சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில், செவ்வாய் (ஆக. 30) மற்றும் புதன்கிழமை (ஆக. 31) ஆகிய இரு நாட்களும் ஜோகூரின் இரு சாலைகள் சில மணி நேரம் மூடப்படும்.
“நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை, ஜாலான் பெஜாபாட் கெராஜான் மற்றும் ஜாலான் கம்போங் பாரு ஆகிய சாலைகளில் டத்தாரான் சகாயா கூலாய் நோக்கி செல்வதைத் தவிர்க்குமாறு சாலைப் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்”, ஏனெனில் அங்கு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்படும் என்று கூலாய் மாநகர சபை (MPKu) செயலாளர் முஹமட் சியாஹ்ரிசாத் அல்வீ கூறினார்.
சுதந்திர தின நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெறவுள்ள நிலையில், வீதிகள் மூடப்படுவது தொடர்பில் கூலாய் மாநகர சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனவே, தேசிய தின கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்புக்கு வழி வகுக்கும் வகையில் புதன்கிழமை காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சாலைகள் தடை செய்யப்படும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கவனத்தில் எடுத்து, தங்கள் ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டத்தாரான் சகாயா கூலாயில் நடைபெறும் நாட்டின் 65வது தேசிய தின விழாவில் பங்கேற்குமாறு சியாஹ்ரிசாத் அல்வீ பொதுமக்களை வலியுறுத்தினார்.
இன்று திங்களன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற மாதாந்திர மாநகரசபை கூட்டத்தில், கூலாய் மாநகர சபை தலைவர் நடாஷா ஹாரிஸ் சார்பாக அவர் பேசும்போது, ”கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழாவை எங்களால் கொண்டாட முடியவில்லை, இந்த முறை இது நிச்சயமாக ஒரு கலகலப்பான விஷயமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
கூலாய் மாநகர சபை தலைவர் நடாஷா ஹாரிஸ், ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 30 வரை மாநில அரசாங்கத்துடன் நெதர்லாந்தில் ஒரு உத்தியோகபூர்வ பயணத்தில் இருந்ததால், இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியாமல் போனதாக முகமட் ஃபாடில் பங்கேற்பாளர்களிடம் தெரிவித்தார்.









