கிள்ளான், செப்டம்பர் 12 :
இம்மாதம் தொடங்கி எதிர் வரும் டிசம்பர் மாதம் வரையிலான பருவகால மாற்றத்தை தொடர்ந்து, மாவட்டத்தைச் சுற்றி மொத்தம் 62 இடங்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) தலைவர் ஷாமான் ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.
கடல் அலை எழுச்சியின் போது மழை பெய்தால், அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், அவற்றில் அதிக ஆபத்துள்ளவை என கண்டறியப்பட்ட பகுதிகளில் கம்போங் தோக் மூடா, காப்பார்; தேலோக் காங், சுங்கை செர்டாங் மற்றும் பூலாவ் இண்டா என்பவை அடங்கும்.
“நேற்று நடந்தது போல், கடலில் பெரிய அலைகள் வந்தன, ஆனால் மழை பெய்யவில்லை, அதனால் நிலைமை இன்னும் கட்டுக்குள் இருந்தது என்றார்.
“அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாங்கள் கவலைப்படுவது என்னவென்றால், அந்த நேரத்தில் மழை நிச்சம் பெய்யும், அப்போது அலை எழுச்சி ஏற்பட்டு பெரிய அலைகள் மேலெழும், அதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது,” என்று அவர் இன்று பெங்கலான் தோக் மூடா படகுத்துறையில் டயர்களை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செப்டம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலநிலை, வானிலை முன்னறிவிப்பு அறிக்கையின் அடிப்படையில், சிலாங்கூர் தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாற்றத்தை எதிர்கொள்ளும் என்று ஷாமான் கூறினார்.