கோலாலம்பூர், செப்டம்பர் 23 :
வாகனம் ஓட்டுவதற்கான தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், மற்றொரு நபரை தேர்வு எழுத வைத்த மலேசியருக்கு நேற்று, சிங்கப்பூர் நீதிமன்றம் இரு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
கோ ஹா ஹோக் என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்குப் பதிலாக மற்றொருவரை தேர்வு எழுத வைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஷாங் ஷோங் லியாங் என்பவருடன் சேர்ந்து மோசடி குற்றத்தை செய்ததாக அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கோவுக்கு, 52, நேற்று இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் எண் 2 உட்லண்ட்ஸ் இண்டஸ்டிரியல் பார்க் 4ல் உள்ள சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டரில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஷாங்குக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு வாகனங்களை ஓட்டுவதற்கு ஜூலையில் தடை விதிக்கப்படும் என்று பயந்த கோ, அந்த சமயத்தில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய அவர், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார்.
சிங்கப்பூரில் நீண்டகாலம் பணியாற்ற வேண்டியிருந்ததால் அவர் சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளை வாங்கி தனது மலேசிய வாகன உரிமத்தை சிங்கப்பூர் உரிமமாக மாற்ற முடிவு செய்தார்.
ஆனால் அடிப்படை எழுத்துத் தேர்வுக்கு அவர் அஞ்சினார்.
இதனால் தனது நண்பர் ஒருவர் மூலம் முன்பின் அறியாத முகவரிடம் மற்றொருவரை தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். அதற்காக சிங்கப்பூர் டொலர் 500 கொடுக்கவும் அவர் முன் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதி கோ, எஸ்எஸ்டிசிக்கு வெளியே அந்த முகவரைச் சந்தித்து சிங்கப்பூர் டொலர் 500 கொடுத்தார். அப்போது அவருக்குப் பதிலாக மற்றொருவர் தேர்வு எழுதுவார் என முகவர் உறுதியளித் தார்.
இதன் பின்னர் காப்பிக் கடையில் கோ காத்திருந்தார்.
இதற்கிடையே சீன நாட்டவரான ஷாங் முகவரிடம் சிங்கப்பூர் டொலர் 200 பெற்று தேர்வு எழுத ஒப்புக் கொண்டார்.
தேர்வு நாளான ஜூன் 28ஆம் தேதி தேர்வு அதிகாரி கோவின் பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது ஷாங் பதிலளித்தார்.
முகக்கவசத்தை அகற்ற தேர்வு அதிகாரி கூறினார். அப்போது முகம் மாறுபட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரி அவரது ஆவணங்களை சோதனையிட்டார். இதையடுத்து அவர்களுடைய கூட்டு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.