கோலாலம்பூர்:
மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் நேற்று வரை, வெறும் ஐந்து நாட்களில் நாடு முழுவதும் நடத்திய 179 தீவிர அமலாக்கச் சோதனைகளில் 471 சட்டவிரோதக் குடியேறிகளும் (PATI), அவர்களுக்கு வேலை மற்றும் அடைக்கலம் கொடுத்த 31 முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின் போது, உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 1,494 பேரிடம் குடியுரிமை ஆவணச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர். அதே வேளையில், பிடிபட்ட முதலாளிகள் அனைவரும் சட்டவிரோத வெளிநாட்டினருக்கு வேலை வழங்கியது அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டத்தோ ஜகாரியா ஷாபான் கூறுகையில்:”நாட்டின் குடிநுழைவுச் சட்டங்கள் முறையாக மதிக்கப்படுவதை உறுதி செய்யவும், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா/பாஸ் (Pas) சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் இன்னும் ஆக்ரோஷமான, தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஐந்து நாட்களில் அதிகபட்சமாக ஜோகூர் மாநிலத்தில் 52 சோதனைகளும், அதைத் தொடர்ந்து பேராக்கில் 36, கெடாவில் 25 மற்றும் புத்ராஜெயாவில் 22 சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.”
அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு விசாவிற்கும் குறிப்பிட்ட நோக்கங்களும் நிபந்தனைகளும் உள்ளன என்பதை நினைவூட்டிய அவர், அனுமதிக்கப்படாத வேலைகளில் ஈடுபடுவது அல்லது சட்டவிரோதமாகச் சொந்தமாக வணிகம் செய்வது போன்ற விசா விதிமீறல்கள் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும் என்றார். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் தங்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் (Pengusiran) என்றும் எச்சரித்தார்.
சட்டவிரோத வணிகங்கள், முறையான அனுமதியின்றி வேலை செய்தல் போன்றவற்றைக் குறிவைத்து இனிவரும் நாட்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட தலைமை இயக்குநர், சட்டத்தை மீறும் வெளிநாட்டினர் அல்லது முதலாளிகள் குறித்த தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகக் குடிவரவுத் துறைக்குத் தகவல் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.





















