புன்சாக் ஆலாம், செப். 29 :
நாட்டில் உள்ள 60 விழுக்காடு கூட்டாட்சி சாலைகள் பழுதடைந்து விட்டன, மேலும் அவை சுமார் RM3 பில்லியன் ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட வேண்டும் என்று மூத்த பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
அதிக செலவினங்களைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலைகளை நிர்மாணிப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும் அமைச்சகம் சலுகையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், இதுதொடர்பில் அனைத்து அமைச்சகங்களிலிருந்தும் கருத்துகளைப் பெறுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள கூட்டாட்சி சாலைகளின் நடைபாதைகளை அவ்வப்போது பராமரிப்பதற்காக, செப்டம்பர் 13 அன்று நிதி அமைச்சகத்தால் RM130 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஃபாடில்லா கூறினார்.
தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு RM113 மில்லியன் மதிப்பிலான 180 பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு 17 பணிகள் மூலம் RM17 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பணிகள் அனைத்தும் ஒன்றரை மாதம் காலத்தில் அதாவது நவம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.