பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 1 :
இங்குள்ள தாமன் சௌஜானா பூச்சோங்கில் உள்ள ஒரு கடை வீட்டில், நேற்று கொள்ளையடித்ததாக நம்பப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாலை 4 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், மூன்று பேர் கடை வீட்டிற்குள் புகுந்து, RM65,000 ரொக்கம் மற்றும் RM11,000 மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றனர்.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறுகையில், சம்பவம் நடந்த போது, வீட்டில் 43 வயதான இந்தோனேசியப் பெண் ஒருவர் இருந்துள்ளார்.
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகளுடன் அவர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னர், சந்தேக நபர்களில் ஒருவரால் அந்தப் பெண் உதைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நேற்றிரவு 7.39 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்தார்.
“உளவுத்துறை மற்றும் தகவல்களின் விளைவாக, D9 (தீவிர குற்றம்) குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குழு, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) இணைந்து, நேற்று உள்ளூர் ஆண் மற்றும் ஒரு இந்தோனேசிய பெண்ணையும் கைது செய்தனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வான் அஸ்லானின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து RM17,000 ரொக்கம் மற்றும் பல்வேறு நகைகளையும் கைப்பற்றினர்.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். எனவே, தலைமறைவாக உள்ள சந்தேக நபரின் கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகிறோம்,” என்றார்.
கும்பல் கொள்ளைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 395 வது பிரிவின்படி விசாரணை நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் எஸ். அந்தோணி ஜான் 012-5043470 என்ற எண்ணில் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு மையம், IPD சுபாங் ஜெயா 03-78627100 என்ற எண்ணில் தகவல் தருமாறும், அவ்வாறு தகவல் அளிப்பவரின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.