கோலாலம்பூர். அக்டோபர் 1 :
வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டு கம்போடியாவில் சிக்கித் தவித்த 261 மலேசியர்கள் இதுவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று, இன்று சனிக்கிழமை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுவரை 171 பேர் மலேசியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர், மீதமுள்ள 90 பேர் இன்னும் நாடு திரும்புவதற்கான செயல்முறைக்காக காத்திருக்கிறார்கள் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செப்டம்பர் 30, ஏர்ஏசியா விமானம் AK535 மூலம் கம்போடியாவிலிருந்து 13 பேர் தாயகம் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாறான மோசடிகளில் சிக்கியிருக்குக்கும் மலேசியர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக ரோயல் மலேசியா காவல்துறையில் புகார் அளிக்கவும், வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.