கெரிக், அக்டோபர் 6 :
கடந்த சில நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்படும் முதியவர், கம்போங் ஆயிர் பனாஸ் பகுதியில் உள்ள ஆற்றில் மிதந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 60 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடல் இருந்த நிலையின் அடிப்படையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.
இன்று காலை 9.38 மணிக்கு போலீசாரிடமிருந்து தமது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து கெரிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து சுமார் ஐந்து மீற்றர் தூரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.







